தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Friday, April 27, 2007

நாட்டுப் பற்றாளர் நாள்

அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தையே நாட்டுப் பற்றாளர் தினமாகவும் பிரகடனப் படுத்தப் பட்டிருக்கின்றது, அதனையே தமிழீழத்து மக்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கின்றார்கள். இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறித் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது.

பொது மக்களின் பங்களிப்புக்களின் சிகரமாக அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. ‘இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும்’ என்று வேண்டி திருமதி பூபதி கணபதிப்பிள்ளை அவர்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

1988ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி சனிக்கிழமை காலை 10-45 மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி சிறி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள குருந்த மர நிழலின் கீழ் அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். முப்பத்தியொரு நீண்ட நாட்கள் அவர்கள் நெஞ்சுரத்துடன் உண்ணா நோன்பிருந்து, விடுதலைத் தாகத்துடன் இறையடி சேர்ந்தார்.

திருமதி பூபதி கணபதிப்பிள்ளை என்கின்ற ஒரு சாதாரணத் தமிழ்ப் பெண்மணியின் விடுதலை வேட்கையும் அதற்கான தியாகமும் நாட்டுப்பற்றின் சிகரமாக அமைந்தன. அன்னை பூபதி அவர்கள் தனது அகிம்சைப் போராட்டத்தை சாகும்வரை மேற்கொண்டது என்பதானது விடுதலை வேட்கையின் உறுதியின் சிகரம் என்றே கூறலாம். ஓர் இனத்தின் அரசியல் விடிவிற்காகவும், ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராகவும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடாத்தி உயிர்த் தியாகம் செய்த உலகிலேயே முதலாவது பெண்மணி என்ற ஒரு வகையிலும், ஒரு சாதாரண பெண் தனது ஆசைகள் அனைத்தையும் துறந்து தனது நாட்டின் விடிவிற்காக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் என்ற வகையிலும் அன்னை பூபதி அவர்கள் தமிழர்களிடையே முக்கியத்துவம் பெறுகிறார். அன்னை பூபதியின் அகிம்சை வழியிலான நாட்டுக்கான இத் தியாகம் நாட்டுப்பற்றாளர்களின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் ஒரு எடுத்துக் காட்டானதாகும்.

நாட்டுப்பற்றாளர்களை அழிப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விடுகின்ற முயற்சியில் அடக்குமுறை அரசுகள் தொடர்ந்தும் செயல்பட்டு வந்திருப்பதை வரலாறு நமக்குக் காட்டி நிற்கின்றது. முக்கியமாக எமது ஈழத்து விடுதலைப் போராட்டத்தினை எடுத்துப் பார்ப்போமேயானால், சிங்கள அரசானது நாட்டுப் பற்றாளர்களை அழித்து ஒழிப்பதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

காந்திய வழியினை உலகிற்கு அறிவித்து, அகிம்சையைப் போதித்த இந்தியாவே அரசியல் இலாப நோக்கு என்று வரும் பொழுது அகிம்சைக்கும், சமாதானத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காததற்கு மிகவும் ஒரு எடுத்துக் காட்டு எம் பூபதி அன்னையாரும், தியாகி திலீபன் அவர்களுமே. அன்று இந்திய அரசியல்வாதிகள் பூபதி அன்னையையும், தியாகி திலீபன் அவர்களையும் மட்டும் கொன்று விடவில்லை. மகாத்மா காந்தி அவர்களை இன்னும் ஒரு முறை கொன்றார்கள்... காந்தியத்தைக் கொன்றார்கள்... ஈழ மக்கள் இந்தியா மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் மதிப்பினைக் கொன்றார்கள்.

அகிம்சையை எடுத்துக் கூறிய இந்தியாவே இவ்வாறு நடக்கும் பொழுது, இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறி இரத்தக் காட்டேரிகளாக... தமிழரை அழிப்பதிலேயே இதுவரை குறியாக இருந்துவரும் சிங்கள பெளத்தப் பேரினவாதிகள் மட்டும் நம்முடன் சமாதானத்தையும், அகிம்சையையும் பேச வருவார்கள் என்று இன்னும் யாராவது நம்புவார்களேயானால் அது அவர்களது அறிவின்மையே ஆகும். இவையே நமது நாட்டுப் பற்றாளர்கள் தினம் எமக்கு எடுத்தியம்பி நிற்கின்றது.

0 Comments:

Post a Comment

<< Home