தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Wednesday, May 02, 2007

அன்பே சிவம்...

சிலர் செருப்பணிந்தவாறே, அது சரியில்லை என்று வேறொன்றிற்கு ஆசைப்படுவார்கள்; சாண்டில்ஸ் அணிந்தவன், அது எவ்வளவு நல்லதாக இருப்பினும் அதனை விட இன்னும் நல்ல ஒரு காலணி வேண்டும் என்று எண்ணுவான். இன்னும் சிலர், நல்ல ஒரு சப்பாத்தினை அணிந்தவாறே அது சரியில்லை என்று குற்றங் கூறுவார்கள். இவ்வாறு அருமை தெரியாது நமக்குக் கிடைத்தவற்றை வைத்துச் சந்தோசங் காணத் தெரியாதவர்கள் பலர். எதனையும் அருமையாக நினைத்து, இறை நம்பிக்கை இருப்பின் அதனைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறியோ, இறைவனை நம்பாதவர்கள், அதனைத் தந்த இப் பூமிக்கோ அல்லது இயற்கைக்கோ நன்றியினைத் தெரிவிக்க வேண்டுமென்பது என் கருத்து.

அனேகமானவர்கள் நம்புவது, எந்தவொரு உறவு முறையிலும் ஒரு 'நம்பிக்கை' என்பது ஒவ்வொருத்தரும், பொய் சொல்லாது ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக நடந்து கொள்வது என்று எண்ணுவார்கள். ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் நீ உனக்கு உண்மையுள்ளவனாகவும், நீ நீயாகவும் எப்போதும் அந்த விரும்பியவளுடனோ/ விரும்பியவனுடனோ நடந்து கொண்டாயானால் அதுவே உண்மையான உன்னை, உன் உறவுவினை நேசிக்க வைக்கும். காதல் என்பது வெளியில் ஒன்றாகச் சுற்றித் திரிவதிலோ, ஒருவருக்கொருவர் பூ (றோசாப் பூ) கொடுப்பதிலோ, பரிசுகள் கொடுப்பதனாலோ, அல்லது அழகாய் இருப்பதனாலோ அல்லது முத்தங்கள் கொடுப்பதால் மட்டுமோ வருவதன்று... என்னைப் பொறுத்தவரையில், இது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் கூடிய சுழ்நிலையை ஏற்படுத்தி ஒருவரைப் பற்றி முழுமையான உணர்வை மற்றவனுக்கோ/ மற்றவளுக்கோ எடுத்து இயம்பக் கூடியதாக இருக்க வேண்டும், அதுவே ஒருவர் மற்றவருக்கு, ஆசானாகவும், உற்ற நண்பனாகவோ/ நண்பியாகவும், ஆலோசகராகவும் இருக்கச் செய்யக் கூடியதாக அமைய வேண்டும்.


நாம் அனைவரும் இவ் உலகிற் பிறந்து வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணமாவது இருக்கும் என்று நான் நம்புகின்றேன். ஆண்/ பெண்/ பணம்/ பதவி மட்டும் வாழ்க்கையில் எல்லாமும் ஆகி விடாது. அதிலும் மேலான விடயங்கள் வாழ்வில் இருக்கின்றன. நாம் சந்தோசமாகவும், நகைச்சுவை உணர்வோடும் வாழ்க்கையைப் பார்ப்பது நல்லது, ஆனால் வாழ்வையே நகைச்சுவைக்குரியது ஆக்கிவிடக் கூடாது.


நாம் அனைவரும் ஒரு அவசரமானதும், வேகமானதுமான வாழ்க்கையினைக் கொண்டு நடத்துகின்றோம், ஆகவே பொதுவாகவே எம்மைச் சுற்றி என்ன நடக்கின்றன என்பதனை அவதானிக்கத் தவறி விடுகின்றோம். இவ்வாறே எம் வாழ்வானது தொடரின் நாம் நிறைய விடயங்களை இழக்க வேண்டி வரும். ஆகையால் நடந்து வந்த பாதையினைத் திரும்பிப் பார்ப்பதும், நமக்கு உதவியவரை நினைபதும் மிகவும் முக்கியமானது. நாம் இதுவரை செய்த விடயங்களினையும், இனி என்ன செய்ய வேண்டும் என்பதனையும் ஆராய்ந்து செயற்பட வேண்டும்.


ஒரு வேலையினைக் கடின உளைப்புடன் செய்வதால் மட்டும் அதில் பயன் நமக்கு வந்து விடாது என்பது எனது நம்பிக்கை. கடின உளைப்புடன் கூடிய செய்யும் விடயத்தில் ஆர்வமும், நம்பிக்கையும், விருப்பமும் இருத்தல் என்பது மிகவும் முக்கியமானதாகும். அதுவே எமக்கு வெற்றிகளை ஈட்டித் தரும்.


அனைவரையும் மதித்தும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் இருக்கும் போது அன்பாக நடக்காது நாம் அவரை இழந்த பின்பு நினைத்து அழுவதால் என்ன பயன்? ஆகவே யாரும் நம்முடன் இருக்கும் பொழுது அன்பாக அவர்களுடன் நடக்க வேண்டும் என்பது எனது எண்ணம். எவ்வாறு அப்படி நடப்பது என்று எண்ணினால், நாளை நான் உயிருடன் இல்லாது போனால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கும் பொழுது, நமது ஆணவம், அகந்தை (ஈகோ), மற்றும் பிடிவாதம் அனைத்தும் எம்மை விட்டுப் போகும்; அப்பொழுது நாம் அனைவரிடமும் மரியாதையுடனும், பக்குவமாகவும் நடந்து கொள்ளத் தொடங்குவோம். நாம் உண்மையாகவே வெறுக்கும் ஒருவருடன் இவ்வாறு நடந்து பார்த்தால், நாமே நடப்பதனைப் பார்த்து வியப்படைவேம். இது கடினமான விடயமே தவிர, முடியாத விடயமல்ல.


மனித வாழ்வில் நான் என்ற அகந்தை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. சிலர் எண்ணுவார்கள் தாம் என்ன செய்தாலும் மற்றவர்கள் அதனைக் கவனிக்க மாட்டார்கள், ஆகவே தாம் எதுவும் செய்யலாம் எவரையும் எப்படியும் நடத்தலாம் என்று, ஆனால் எல்லாருமே முட்டாட்களல்ல. பொதுவாகவே பலரும் பிழை செய்தவர் முன் சென்று, நீ பிழை செய்து விட்டாய் என்று வாதிட்டுக் கொண்டு இருக்க விரும்ப மாட்டார்கள். ஏன் எனின், இவரிடம் வாதிட்டு ஒரு பயனும் இருக்காது, அத்துடன் இதைச் சொல்லி ஏன் அவர் மனதைக் கஸ்ரப் படுத்த வேண்டும் என்று விட்டு விடுவார்கள். ஆனால் யார் முன்னும் வந்து நீ செய்த விடயம் பிழை என்று கூறுபவர்கள் பொதுவாகவே உன்னை உண்மையாக நேசிப்பவர்களாக இருப்பார்கள். என்ன என்னால் விளங்கிக் கொள்ள முடியாது இருக்கின்றது என்றால், சுடு வார்த்தைகளால்... நானே பெரியவன்... நான் சொல்வது மட்டுமே சரி என்பதனை நிச்சயப்படுத்துவதற்காக நடத்தப்படும் பேச்சுப் பிடுங்கலில் அனேகமானவர்கள் தம்மில் உண்மையாக அன்பு செலுத்துபவர்களையும் உண்மையான நண்பர்களையும் இழந்து விடுகின்றார்கள். நட்பு என்பது ஒரு அரிய உறவு, அதாவது எமது வாழ்வில் அனைத்துச் சொந்தங்களும் ஏற்கனவே இறைவனால் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால் நண்பர்களை மட்டுமே நாம் தேர்ந்தெடுக்கின்றோம். இவ் வகையில் நமக்கு வரும் மனைவியோ/ கணவனோ கூட நம் நண்பர்களே என்பது எனது கருத்து.


நாம் ஒவ்வொரு முடிவுகளையும் எமக்கு வாழ்வில் நடந்த அனுபவங்களையும், எம்மைச் சுற்றி நடப்பவற்றையும் எமது பெற்றோரால் நம்மில் ஏற்படுத்தப்பட்ட சில கலாச்சார, பண்பாட்டு நம்பிக்கைகளையும் வைத்தே எடுக்கின்றோம். சிலவேளைகளில் அனைவரிலும் அன்பு செலுத்துவது என்பது சொல்லளவில் மட்டும் செய்யக் கூடிய ஒன்றாக இருக்கும், அனைவரிலும் அன்பு செலுத்துவது என்பது மிகவும் கடினமான விடயம், அத்துடன் சிலர் அவர்கள் செயல்கள் மூலம் அன்பு செலுத்தவே தகுதி அற்றவர்களாக இருப்பார்கள்; ஆனால் நாம் அனைவருமே இறைவன் படைப்பில் வித்தியாசமானவர்கள் என்பதனை நாம் ஏற்போமானால், மற்றவர்கள் மற்றவர்களாகவே செயற்படுகிறார்கள் என்பதனை எம்மால் ஏற்கக் கூடியதாக இருக்குமானால், மற்றவர்கள் செய்யும் விடயங்களை எம்மால் குறைந்தது சகித்துக் கொள்ளக் கூடியதாக ஆவது இருக்கும்.


நாம் அனைவரும் மறக்காமல் இருக்க வேண்டியது யாரும் கெட்டவனாகப் பிறப்பதில்லை, அதே வேளை ஒவ்வொருவரின் வாழ்விலும் எப்போதாவது மாற்றங்கள் நிகழ்ந்தவாறே இருக்கும்; ஏன் எனின் இன்று சரியாக நமக்குத் தெரிந்த விடயம் நாளை சில வேளைகளில் பிழையாகத் தெரியும்... அவ்வாறே நேற்றுப் பிழையாகத் தெரிந்த விடயம் இன்று சரியானதாகப் படும். நாம் வாழும்போது வாழ்வில் நிரந்தரமான ஒரே விடயம் என்றால் "மாற்றங்கள்" மட்டுமே அத்துடன் நம் 'பிறப்பு' நிச்சயமற்றது... நாம் எங்கு எப்பொழுது எப்படிப் பிறப்போம் என்று யாருக்கும் தெரிவதில்லை, ஆனால் நமது 'இறப்பு' என்பது ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக நடைபெற இருக்கும் விடயமே. ஆகவே நாம் இவ்வுலகில் இருக்கும் சிறிய காலத்தில், போலிப் பகட்டிற்காக மற்றவர்களுடன் போட்டி, பொறாமையுடன் வாழாது மற்றவர்கள் மீது அன்பு செலுத்திச் சந்தோசமாக வாழ வேண்டும் என்பது எனது எண்ணம்... நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்??

3 Comments:

At 11:16 AM, Blogger siva007 said...

what a long Article
Anbhev sivam sir but nice one

siva
pondicherry

 
At 2:03 PM, Blogger Chandravathanaa said...

கரன்
உங்கள் பதிவை இன்றுதான் பார்க்கிறேன்.
நல்ல கருத்துக்கள் பலவற்றை எழுதியுள்ளீர்கள்.

 
At 2:02 AM, Blogger Haran said...

சிவா... மற்றும் சகோதரி சந்திரவதனா... உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...

 

Post a Comment

<< Home