தண்ணீர்... தண்ணீர்... தா...தண்ண்ணீஈஈ...ர்
எனக்கு நல்ல விடயம் எனப் பட்ட ஒரு விடயத்தினை இங்கு எழுதுகின்றேன்... உங்களுக்குச் சரி எனப் பட்டால் அதனை நீங்கள் கடைப் பிடிக்கலாம். யாராவது இங்கு இவன் "தண்ணி அடிக்கிறதைப்" பற்றி எழுதி இருக்கிறானா என நினைத்து வந்திருந்தால் அவர்களுக்கு அவர்கள் ஏமாந்ததைத் தெரிவித்துக் கொள்கிறேன் ;)
இக் கட்டுரையினை நான் இங்கு எழுதக் காரணம், தரவுகள் தருவதன் மூலம் உங்களைப் பயப்படுத்துவதல்ல; மாறாக, நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றன, நாம் அறிந்தும், அறியாமலும், கவன ஈனத்தினத்தின் காரணத்தாலும் நம்மைச் சுற்றி என்னென்ன நம்மால் நடாத்தப்படுகின்றன என்பதனை எடுத்துக் கூறுவதே எனது நோக்கமாகும்.
இன்று உலக வெப்பம் அதிகரித்துக் கொண்டு செல்வதன் காரணமாகவும், மக்களின் தொகை அதிகரித்த வண்ணம் செல்வதன் காரணமாகவும், அருமையான தண்ணீரை நாம் உபயோகிக்க வேண்டி உள்ள அளவு குறைந்தபடியே செல்கின்றது.
உலகில் இருக்கும் நீரின் அளவோ முடிவானது. அதே நேரம் நமது வளர்ந்து வரும் மக்களின் தொகையோ அதிகரித்தபடியே செல்கின்றது; ஆகவே நமது நீரின் பாவனையும் அதன் தேவைகளும் கூட அதிகரித்தவாறே செல்கின்றன.
இப்பொழுது உலகில் ஒன்றில் மூன்று பகுதியினர், நீர் மிகவும் குறைவாக உள்ள பிரதேசங்களிலேயே வாழ்கின்றார்கள். இதுவே 2025ம் ஆண்டளவில் இரண்டில் மூன்றாக அதிகரிக்க உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். 1
ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது, ஒரு நாளிற்கு ஒருவரிற்குரிய குறைந்தளவு நீர் கொள்முதல் அளவானது 50லீட்டர் என. இதுவே குடி நீர், குளியல்/சுத்தம் செய்தல், மற்றும் சமையல் மற்றும் இதர தேவைகளுக்காகப் பயன்படுத்தப் போதுமானதாகும் என ஐ.நா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த 50 லீட்டர் நீரிலும் குறைவான நீர் கொள்முதலுடன் வாழும் நாட்டு மக்களும் உள்ளதாக அதே ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறாக குறிப்பிட்ட அளவு நீர் கொள்முதல் வசதியே சில இடங்களில் இருக்கின்றன, ஆயினும் அதனைக் கூடச் சில இடங்களில் குப்பைகளைக் கொட்டியோ, அல்லது கழிவுகளைக் கலக்க விடுவதன் மூலமோ அந்த நீரையும் நாம் நாசம் செய்து விடுகின்றோம். இதனால் நீரின் மூலம் பரவும் கொலரா, மலேரியா, வாந்திபேதி போன்ற நோய்களை நம்மை அறியாமலேயே அந்த நீரை உபயோகிப்பவர்களுக்கு நாம் ஏற்படுத்துகின்றோம்.
இது இவ்வாறிருக்க, நம் அனைவராலும் நீர் விரயம் செய்யப்படுகின்றது. அதாவது உதாரணத்திற்கு எனது வீட்டினரையே எடுத்துக் கொண்டால்: எனது வீட்டார் சில வேளைகளில், சமையலறையினைச் சுத்தம் செய்யும் பொழுது பைப்பில் (pipe or water tap) நீரினைத் திறந்த படி விட்டு, சுற்றி வர உள்ள இடங்களைச் சுத்தம் செய்வார்கள், அதனை நான் எடுத்துக் கூறும்பொழுது, தண்ணி திறக்காமல் தண்ணி வராது அல்லது நான் எவ்வாறு தண்ணி பாவிக்காது சுத்தம் செய்வது என விதண்டாவாதம் பேசுவார்கள், அதாவது நான் கூறுவது தண்ணீர் திறக்க வேண்டாம் என அல்ல, ஒரு இடத்தினைத் துப்பரவு செய்வின் ஒரு துணியை ஈரமாக்குவதற்குத் தேவையான அளவு நீரைப் பயன்படுத்தி விட்டு நீர் வரும் குழாயினை பூட்டி/மூடி விடலாம் அல்லவா... நாம் நீர் ஓடியபடி விட்டுப் பின் மற்றைய இடங்களைச் சுத்தம் செய்யும் பொழுது அங்கு குழாயிலிருந்து லீட்டர்க் கணக்கில் நீர் தேவையற்று விரயமாகிவிடும்.
அதே போன்று, குளிக்கும் பொழுது பொதுவாக நாம் ஊரில் கிணற்றில் வாளி போட்டு அள்ளிக் குளித்துப் பழகி, எப்படிக் குளித்தாலும் எமக்கு நிறைவு இருக்காது. அதனால் பலரும் மணித்தியாலக் கணக்கில் குளிப்பதனை நான் கண்டிருக்கின்றேன், ஏன் நான் கூட நீர் பற்றி ஒரு விளிப்புணர்வு வரும் வரை அவ்வாறு செய்திருக்கின்றேன். ஒரு 5 நிமிடத்தில் உங்களது குளியலைத் தாராளமாக முடிக்கலாம் என்பது எனது எண்ணம் மட்டும் அல்ல ஆராய்ச்சியாளர்களும் இதனையே செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர். அதே போன்று, குளிக்கும் பொழுது சவற்காரத்தினை நாம் பாவிக்கையில் நீர் வழிந்து தேவையற்று விரயமாவதைத் தடுப்பதற்காக அதனை நிறுத்தி விட்டு நாம் சவற்கரத்தில் உடலில் போடலாம் தானே?
மற்றும், சிலர் பல் துலக்கும் பொழுதும், முகச் சவரம் (shaving) செய்யும் பொழுதும், சமையற் பாத்திரங்கள் கழுவும்பொழுதும் நீர் வரும் குழாயினைத் திறந்தவாறு விட்டே தமது வேலைகளைச் செய்கின்றார்கள். தமக்குத் தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொள்ளாது நீரை வீணாக்குகின்றார்கள்; அத்துடன் கார் கழுவுதல், வீட்டுப் பூஞ் செடிகளிற்கு நீர் இறைத்தல் போன்ற மேற் குறிப்பிட்ட விடயங்களினால் நீர் விரயமாகும் விகிதம் அதிகம் என நான் வாழும் நாட்டு அரசினர் அடிக்கடி கூறித் தொலைக்காட்சியிலும் அது பற்றி விளிப்புணர்வு வருவதற்காக விளம்பரங்கள் செய்கின்றார்கள்.
நாம் நீரினைத் தேக்கி வைத்துப் பாதுகாத்து அதனை உபயோகிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். உதாரணமாக: நீர் தேக்கும் தொட்டிகளினை வீட்டில் அமைத்துக் கொள்ளலாம், அதனை இங்கு நான் வாழும் நாட்டு அரசு மிகவும் ஆதரித்து அதற்கு நிதி உதவி கூட வழங்குகின்றது. ஆகவே பண்டைய காலங்களில் மன்னர்கள் குளங்கள், மதகுகள் எனக் கட்டி நீரைத் தேக்கியது போல, நாமும் இக் காலத்திற்கும் பிரதேசங்களிற்கும் ஏற்ற முறையில் ஏதாவது செய்யலாம், செய்து நீரைத் தேக்கி அதனை நமது இதர செயல்களுக்குப் பாவிக்கலாம் என்பது எனது கருத்து.
இது கூட நாம் செய்யாவிடின், எமக்குப் பின் வரும் சந்ததியினர் ஒரு துளி நன்னீர் எடுக்கக் கூட மிகவும் அலைந்து திரிய வேண்டிய நிலை உருவாகும்; அவர்களுக்கு நம்மால் ஒரு பாலைவனத்தினை மட்டும் தான் பரிசாகக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். அவர்களிற்கு இந் நிலையினை ஏற்படுத்த நாமே காரண கர்த்தாக்களாகவும் அமைந்து விடுவோம். நானிங்கு நடப்பவற்றினைக் கூறியுள்ளேன்... முடிவு எடுக்க வேண்டியவர்கள் நல்லது கெட்டது தெரிந்த தனி மனிதர் ஒவ்வொருவருமே.